அடுத்த வருடம் அனைத்து பாடசாலைகளிலும் அதிபர்கள் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுகளை தீர்த்து நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளை கோரியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மல்லாவி தொழில்முனைவோர் கல்லூரியின் தோட்டக்கலை நிகழ்ச்சித் திட்டத்தில் இடம்பெற்ற விவசாய கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, மாகாண கல்வி அமைச்சு, வடமாகாண சபையின் பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் அலுவலகம், உணவு மற்றும் விவசாய அமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஆதரவுடன் வடமாகாணத்தில் 150 பாடசாலைகளை இலக்கு வைத்து தொழில்முனைவோர் பாடசாலை தோட்டக்கலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி அரங்கில் விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, விவசாயிகளுக்குப் புதிய தொழில்நுட்ப அறிவைப் புகட்டுதல், விவசாயப் பொருட்களை மேம்படுத்த ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
இக்கண்காட்சியை பத்தாயிரம் பாடசாலை மாணவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக்கும் வகையில் 87 பாடசாலைகளுக்கு 150 000 ரூபா பண காசோலைகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வி விவகாரம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், போராட்டங்கள், எதிர்ப்புக்கள் இன்றி சிறுவர்களின் கல்வியே மிக முக்கியமான பணியாக கருதி கலந்துரையாடல் மூலம் தீர்வு காண்பதே சிறந்தது எனவும் தெரிவித்தார்.