இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
விளையாட்டு அமைச்சின் பாதகமான செல்வாக்கினால் கிரிக்கெட் நிறுவனத்தின் அன்றாட செயற்பாடுகள் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, இது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அறிவிப்பதற்கும் ஜனாதிபதியுடனான சந்திப்பு அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதி விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி, இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கருத்திற்கொண்டு உரிய கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளை பதவி விலகுமாறு சமூகத்தின் அழுத்தம் காரணமாக அமைச்சுக்கு எதிராக அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை கிரிக்கெட் சபை முன்வைப்பதாகவும் அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.