பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பழைமை வாய்ந்த பயணிகள் மேம்பாலம் அகற்றப்படுவதால் மறு அறிவித்தல் வரை மரைன் டிரைவ் வீதி மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் மேம்பாலம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதால், நேற்று (5) ஆரம்பிக்கப்பட்டுள்ள இடிப்புப் பணிகள் காரணமாக இந்த வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி கரையோர வீதியில் வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டிக்கு வரும் வாகனங்கள் பம்பலப்பிட்டி புகையிரத வீதியூடாக காலி வீதிக்கு சென்று பின்னர் கொள்ளுப்பிட்டிக்கு செல்ல முடியும்.
கரையோர வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் க்ளென் ஆர்பர் பிளேஸில் திரும்பி காலி வீதிக்கு வந்து டூப்ளிகேஷன் வீதியூடாக வெள்ளவத்தை நோக்கி செல்ல முடியும்.
மூடப்பட்ட பகுதிக்கு அப்பால் கரையோர வீதியின் இருபுறமும் வாகனங்கள் பயணிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.