கண்டி நகருக்கான கலாசார மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கிரேட்டர் கண்டி திட்டம் அடுத்த வருடம் அறிவிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 14 காணிகள் மற்றும் சொத்துக்களுக்கான முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
7,500 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முதலீட்டாளர்களுக்கு அப்புறப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு 10,500 மில்லியன் ரூபா பெறுமதியான காணிகளை குத்தகைக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விசும்பாய கட்டிடத்தை உலகப் புகழ்பெற்ற ஹோட்டல் முதலீட்டாளரிடம் கையளிக்கவும் யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள காணியை தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்காகவும் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நிலத்தின் மதிப்பை ஒரேயடியாக செலுத்தாமல், 10 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.