நாட்டில் வாழும் பலருக்கு நாட்டின் மீதும், தற்போதைய ஆட்சியின் மீதும் அதிக நம்பிக்கை இல்லாததால், ஏராளமான படித்த, திறமைசாலிகள், புத்திசாலிகள், இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும், எமது நாட்டை விட குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடுகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் சமகாலமும் எதிர்காலமும் சரிப்பட்டு வராது என்ற உணர்வும், அரசாங்கத்திடம் சரியான தொலைநோக்கு பார்வை இல்லாமையை உணர்ந்ததாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேடிச் சென்ற கிட்டத்தட்ட 56 இளைஞர்கள் மனித கடத்தல் கும்பல்களிடம் சிக்கி, தற்போது மியான்மரில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கி பரிதாபகரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இச்சம்பவத்தில் இருந்தேனும் தற்போதைய ஆட்சியாளர்கள் கண் திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 56 ஆவது கட்டமாக வத்தளை பமுனுகம கொன்சால்வ்ஸ் கல்லூரி 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (22) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
VAT போன்றவற்றின் அதிக வரிச்சுமையினாலும், இந்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாலும், இளைஞர்கள் கூட விரக்தியடைந்துள்ளனர் என்றும், இதனால் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களை நாட்டிலேயே தக்கவைத்து அவர்களை பொருளாதார அபிவிருத்தியில் பங்குதாரர்களாக்க முடியும் என்றும், அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியை விட பொருளாதார சுருக்கத்தில் கவனம் செலுத்துவதாலயே இளைஞர்களை நாட்டை கட்டியெழுப்பும் தலைவர்களாக மாற்ற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சுனாமியில் நம் நாட்டு இளைஞர்கள் சிக்கியுள்ளனர் என்றும், இந்த ஆற்றல் மிக்க இளைஞர்களை ஒன்று திரட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்தித் தொழில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குப் பதிலாக பலப்படுத்தப்பட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும், பொருளாதார அபிவிருத்தியின் பலன்களை ஒவ்வொரு பிரிவினருக்கும் பகிர்ந்தளிக்கும் சரியான பொருளாதாரப் பயணம் நமது நாட்டிற்குத் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் பிரமுகர்களது பிள்ளைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், அவர்கள் தங்கள் பெற்றோரின் அரசியல் அதிகாரம் மற்றும் செல்வத்தின் சலுகைகளை அனுபவித்து வருகின்றனர் என்றாலும், நாட்டின் பெரும்பான்மையான இளைஞர்கள் மிகவும் ஆதரவற்றவர்களாக உள்ளனர் என்றும், மியான்மரில் பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.