வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 02 மாதங்களில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் உள்ள வர்த்தக சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் செயற்படும் நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தின் கைத்தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாய சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் யாழ்.பல்கலைக்கழக கல்வி ஊழியர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ஸ்ரீ.சத்குணராஜா தலைமையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அபிவிருத்தித் திட்டமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன் பல்கலைக்கழக துறையை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.