ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சீனா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் பல நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.