ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 35 நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாட்டுக்கு வந்துள்ளனர்.
அவர்களில் அந்த பிராந்தியத்தின் விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளும் உள்ளடங்குவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மாநாட்டின் ஆரம்ப அமர்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் பின்னர், இலங்கையில் அதிகளவான அரச பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு இதுவாகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு கடந்த காலங்களில் நாட்டிற்கு 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கியுள்ளது, இது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார திட்டத்தையும் மேம்படுத்துகிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் மாநாட்டுடன் இணைந்து இன்று அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் பல நாடுகளின் விவசாய அமைச்சர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவது நாட்டுக்கு நன்மை பயக்கும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டை 57 வருடங்களின் பின்னர் இலங்கையில் நடத்த தீர்மானித்தமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் மீதான உலகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.