முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 09 விசேட வைத்திய நிபுணர்களைக் கொண்ட மருத்துவக் குழுவொன்றை நியமிக்குமாறு மாளிகாகந்தை நீதவான் திருமதி லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத சுகாதார நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டார்.
கெஹலிய ரம்புக்வெல்லவின் மருத்துவ நிலைமைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிபுணர் குழுவில் இருதய நோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களை உள்ளடக்குமாறும் நீதவான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ரம்புக்வெல்லவின் உடல் நிலை தொடர்பிலான விசாரணைகளை எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.