கரந்தெனிய குருதுகஹத்தபம் திவிதுரகமவில் நேற்று (26) இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட கரந்தெனிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் திலீப ரொஷான் குமாரவின் கொலையாளிகளை அடையாளம் காண ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொலைக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய, தனது அலுவலகத்தின் முழுக் கண்காணிப்பின் கீழ், தனி சிறப்புப் பொலிஸ் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அலுவலகம் கூறுகிறது.
எல்பிட்டிய காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, எல்பிட்டிய பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு, காலி பொலிஸ் குற்றப் பிரிவு, எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் திணைக்களம் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த கொலை பாதாள உலகத்தின் செயலா அல்லது உத்தியோகபூர்வ வேலையா அல்லது வேறு காரணமா இல்லையா என்பது குறித்து மிக நுணுக்கமான அலசல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் காணவுள்ளதாகவும் கொலையாளிகளை அடையாளம் கண்டு விரைவில் கைது செய்து கொலைக்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுப்பதாகவும் எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அது வரும் நாட்களில் தெரியவரும் என்றும் அலுவலகம் கூறுகிறது.