சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (27) கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கேள்வி – தற்போது இலங்கையில் வெற்றி பெறப்போவதாக இரண்டு ஜனாதிபதிகள் உள்ளனர். அப்போது பொதுஜன பெரமுனவுக்கு இடம் கிடைக்குமா?
பதில் – பேஸ்புக் ஜனாதிபதியும் வாயச்சவடால் ஜனாதிபதியுமே தற்போது வாக்களிப்பின்றி வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் ஜனாதிபதியாவார். நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்றுக்கொண்ட தலைவர் யார் என்பதை இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதன்படி, நாட்டு மக்களின் கோரிக்கையே நாட்டின் சித்தாந்தமாகிறது. வரலாறு நெடுகிலும் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஒரு முக்கிய பிரச்சினையை அடிப்படையாக கொண்டு வாக்களித்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர மகிந்தவை கொண்டு வந்தனர், அதை அவர் செய்தார். மகிந்தவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நாட்டை அபிவிருத்தி செய்யும்படி மக்கள் சொன்னார்கள் அதை அவர் செய்தார். நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே மைத்திரிபால சிறிசேன கொண்டுவரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானித்தனர். கோட்டாபய ராஜபக்ச தேசிய பாதுகாப்பை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டார். அது நடந்ததா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய் வார்கள். இம்முறை பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இந்த முறையை மாற்றுவதாகக் கூறி அதை நிரூபித்த தலைவர். எனவேதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென மக்கள் கருதுகின்றனர்.
கேள்வி – சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதை அரசு வெற்றி பெறுமா?
பதில் – அப்படிச் செய்வது நல்லது. அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு சந்தர்ப்பம். அதனை விவாதத்திற்கு எடுத்து மிக விரைவில் வாக்கெடுப்புக்கு சென்றால் பாராளுமன்றத்தில் தனது பலத்தை காட்ட முடியும்.