விமானங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமாகி வருவதாக ஸ்ரீலங்கன் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்திருந்தார்.
7 விமானங்களைப் பெறுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று 7 விமானங்களை இரத்து செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது விமானங்கள் இரத்து இல்லை, தாமதம் என்று கூறினார். மூன்று விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும், நேற்று முன்தினம்(26) இரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நேற்றைய தினம் இலங்கை விமானங்கள் இரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கட்டிய தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க மார்க்பெட் வளாகத்தில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தலைவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் பேசிய தலைவர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறுகள், விமானங்களுக்கான உதிரி பாகங்கள் இல்லாமை, ஊழியர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல நெருக்கடிகள் உள்ளன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தன்னிடம் பல முன்மொழிவுகள் உள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அதுல கல்கட்டிய தெரிவித்தார்.
விமானங்களுக்கான டிக்கெட்டுகள் பல மாதங்களுக்கு முன்பே விற்கப்படுவதாகவும், அந்த நேரத்தில் ஒரு விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அந்த விமானத்தின் பயணத்தினை இரத்து செய்ய வேண்டிவரும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இடங்களுக்கு செல்லவிருந்த 06 விமானங்கள் நேற்று இரத்து செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு நேற்று புறப்படவிருந்த 07 விமானங்கள் இரத்து செய்யப்படவில்லை, ஆனால் தாமதமாகியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.
தொழில்நுட்பக் கோளாறுகள், வேறு நாட்டிலிருந்து வரும் விமானத்தின் தாமதம் (சில பயணிகள் இந்த நாட்டிலிருந்து வேறு நாட்டிற்குச் செல்வதற்காக வேறு விமானத்தில் வந்தால்) உள்ளிட்ட பல காரணிகள் விமானத்தின் தாமதத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இது தொடர்பில் விமான சேவையின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரியிடம் கேட்ட போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 27 விமானங்கள் தேவைப்பட்ட போதிலும், தற்போது 20 விமானங்கள் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்தார். விமானத்தில் எலி ஒன்று இருந்தமையினால் விமானத்தை 03 நாட்கள் தடுத்து வைத்து சோதனையிட்டதாக விமான நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானங்கள் பற்றாக்குறையினை எவரும் கருத்தில் கொள்வதில்லை.
2021 ஆம் ஆண்டில், கொவிட் சூழ்நிலையால் விமானங்களின் விலை குறைக்கப்பட்ட போதிலும், 11 விமானங்களை வாங்க முயற்சித்ததாகவும், ஆனால் கமிட்டிகள் உட்பட பல்வேறு அதிகாரிகளால் விமர்சிக்கப்பட்டது என்றும், அந்த நேரத்தில் மலிவாக வாங்கக்கூடிய விமானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார். இப்போது விலைகள் அதிகமாக அதிகரித்துள்ளது. தற்போது பாவனையில் உள்ள விமானங்களும் கடன் தவணையின் கீழ் எடுக்கப்படுவதாகவும், அண்மைக்காலமாக விமானங்களை கொள்வனவு செய்ய முயற்சித்த போதிலும், நாடு திவாலானதாக அறிவிக்கப்பட்டதன் காரணமாக சில நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை வழங்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.