ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசிய நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்தோடு சகலருக்கும் தமது கருத்துக்களை வெளியிட வாய்ப்புள்ள ஜனநாயக பாராளுமன்ற முறையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் 09 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் 100 வலயங்களில் நிறுவப்பட்ட அனைத்து வலய மாணவர் பாராளுமன்றங்களிலிருந்தும் அதிக வாக்குகளைப் பெற்ற தலா இரு உறுப்பினர்கள் தேசிய மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கிளையின் ஒத்துழைப்புடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய மாணவர் பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், பிரதி சபாநாயகர் மற்றும் 10 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
தேசிய மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் அரசியல் தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியதுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருவதற்கும் ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கியிருந்தார்.