ஈரான் – இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால், மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்திற்கு இடையே மூன்றாம் உலகப்போர் குறித்த நாஸ்டர்டாமின் திகிலூட்டும் கணிப்புகள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளன.
மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதலுக்கே முடிவு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்டமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தில் கடந்த வாரம் நடந்த ஏவுகணை தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவர் உட்பட சிலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது என்று கூறிய ஈரான், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியது.
ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை, அடுக்கடுக்கான ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. கிட்டதட்ட 300 ஏவுகணைகள் வீசப்பட்டதில் இவை அனைத்தையும் இஸ்ரேல் அமெரிக்கா ஆயுதங்களுடன் வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனே கூறியிருந்தார். மேலும், ஈரானுக்கும் கடும் எச்சரிக்கையை விடுத்து இருந்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் மீது இனி தாக்குதல் நடத்தப்போவது இல்லை என்று ஈரான் தற்போது அறிவித்துள்ளது. எனினும், மத்திய கிழக்கில் பதற்றம் குறைந்தபாடில்லை. இஸ்ரேல் – ஈரான் இடையே போர் மூளும் பட்சத்தில் இது மூன்றாவது உலக போராக வெடிக்கும் என்றும் அச்சம் எழுப்பப்படுகிறது.
இதற்கிடையே, மூன்றாம் உலகப்போர் தொடர்பாக நாஸ்டர்டாம் மற்றும் ஆல்பர்ட் பைகே ஆகியோரின் கணிப்புகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.
உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்த வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.
விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று எழுதி வைத்துள்ளாராம். அவ்வப்போது இவரது கணிப்புகள் அப்படியே பலித்ததாக செய்திகள் உலா வரும். தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், மூன்றாம் உலகப் போர் குறித்த அவரது கணிப்பு வைரலாகி வருகிறது.
“சிவப்பு நிறம் கொண்ட எதிரி தனக்கு இருக்கும் பயத்தால், பெருங்கடலை பயத்திற்கு உள்ளாக்குவார்” என்று நாஸ்டர்டாமஸ் கூறி உள்ளார் .. “சிவப்பு எதிரி” என்று நாஸ்ட்ராடாமஸ் சீனாவையும் நாட்டின் சிவப்புக் கொடியை குறிப்பிடுவதாக சிலர் கூறினாலும் தற்போது செங்கடலில் நிலவும் பதற்றத்துடன் ஒப்பிட்டு சிலர் கூறி வருகிறார்கள்.
அதேபோல, அமெரிக்க கேப்டனாக இருந்த ஆல்பர்ட் பைக், அமெரிக்க சிவில் போரின் போது அதாவது கடந்த 1871 ஆம் ஆண்டு எழுதிய கடிதமும் தற்போது வைரலாகி வருகிறது. அந்த கடிதத்தில், மூன்றாம் உலகப் போர் யூதர்களுக்கும் இஸ்லாமிய உலகத்தின் தலைவர்களுக்கும் இடையேயானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாராம். இரு தரப்பும் ஒருவரை ஒருவர் அழித்துகொள்வார்கள்” என்று எழுதியுள்ளராம். இந்த கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.