சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) ஆசிரியர் – அதிபர் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும், அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (27) வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சையின் மதிப்பீடு தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ளப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.