உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. உடல், தான் இயங்குவதற்கு உபயோகித்தது போக மீதி கொழுப்புப் பொருட்கள் உடலில் மற்றும் ரத்தக் குழாய்களில் மெதுமெதுவாக படிய ஆரம்பிக்கிறது.
இந்த அதிகப்படியான கொழுப்பு ரத்தக்குழாய்களிலுள்ள மற்ற சில பொருட்களுடன் சேர்ந்து கொழுப்புகளின் கலவையாக கடினமான ‘காறை’யாக மாறி ரத்தக் குழாய்களின் உள்சுவர்களில் படிந்துவிடுகிறது.
நிறைய வகைகளில் கொழுப்புப் பொருட்கள் உடலில் இருந்தாலும் முக்கியமான இரண்டு கொழுப்புகளைப் பற்றித்தான் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். 1) ‘எல் டி எல்’ என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பு வகை, 2) ‘ஹெச் டி எல்’ என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பு வகை ஆகும். ‘எல் டி எல்’ என்ற கெட்ட கொழுப்பானது ரத்தக்குழாய்களின் உள்பகுதியில் படிய ஆரம்பித்து ரத்த ஓட்டம் சீராக போவதைத் தடுத்து, இதய நோயை உண்டாக்குகிறது. ‘ஹெச் டி எல்’ என்ற நல்ல கொழுப்பானது ரத்தத்திலிருந்து கெட்ட கொழுப்பை அப்புறப்படுத்தி, கல்லீரலுக்கு அனுப்பி விடுகிறது. இதன் மூலம் கொழுப்பு ரத்தக் குழாய்களின் உள்பகுதியில் படிவது தடுக்கப்படுகிறது.
கெட்ட கொழுப்புகளின் கலவையான காறை, இதயத்துக்கு இரத்த சப்ளை செய்யும் இரத்தக் குழாய்களிலும் படிந்து, அதை அடைத்து, எதிர்பாராதவிதமாக ஒருநாள் திடீரென்று, இதயத்துக்கு சுத்தமாக ரத்தம் போகவிடாமல் செய்துவிடுகிறது. இதயத்துக்கு இரத்தம் போகவில்லை என்றாலோ, அல்லது குறைவாக சென்றாலோ, முதலில் நெஞ்சுவலி, அப்புறம் மாரடைப்பு ஏற்படலாம்.
நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில், கெட்ட கொழுப்பு எவ்வளவு இருக்கிறது, நல்ல கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்றெல்லாம் பார்த்து, பார்த்து நாம் சாப்பிடுவதில்லை. தினமும் உடலுழைப்பு, ஆரோக்கியமான உணவு, போதுமான உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல சிந்தனை இவைகளெல்லாம் இருந்தால், அதிக கொழுப்பு உடலில் சேர வாய்ப்பில்லாமற் போய்விடுகிறது. இவைகளெல்லாம் இல்லாதபோது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாகி, கடைசியில் மாரடைப்பில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
40 லிருந்து 50 வயது வரை உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை, ‘ரத்தக் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை’ செய்ய வேண்டும். 50 லிருந்து 60 வயது வரை உள்ளவர்கள், ஆண்டுக்கு இருமுறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். 60 வயதைத் தாண்டியவர்கள், ஆண்டுக்கு 4 முறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். உங்கள் இதய சிகிச்சை நிபுணரிடம் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்று, ஆலோசனைகளை கண்டிப்பாக பெற வேண்டும்.