அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதன் காரணமாக, புத்தக விலை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர விழாவில் உரையாற்றும் போது கருத்து வெளியிட்டார்.
“ஒரு புத்தகத்தின் விலை ஐந்தில் ஒரு பங்கு – 20% வரை அதிகரித்துள்ளது. இதனால் அதிகாரிகள் குழப்பத்துடன் இருக்கின்றனர். முன்பு எழுதுபொருட்கள் உட்பட பல உத்தியோகபூர்வப் பொருட்களுக்கு 15% VAT இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT வரியில்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். தற்போது நேரடியாக 0% இலிருந்து 18% வரைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. எழுதுபொருட்களுக்கு 3% மட்டுமே இருந்த நிலையில் இது கூடுதல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ஜனாதிபதி செயலகத்திலிருந்து VAT தொடர்பாக விசாரணை நடப்பதாகவும், பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட பதில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொட ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு புத்தகங்களுக்கு VAT விதிக்கப்படுகிறது. இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT, 2024 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதால் புத்தக விற்பனை பெரிதும் பாதிக்கபட்டு வருகிறது. இது தொடருமாயின், ஒரு குழந்தைக்கு கூட புத்தகம் வாங்க இயலாது” என்றார்.