கிளிநொச்சி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தையடுத்து, அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய இரு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய நபர், காவல்நிலைய சிறைக்கூடத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின்போது கடமையில் இருந்த உப காவல்துறை பரிசோதகரும், காவல்துறை கான்ஸ்டபிளும் விசாரணை முடிவுக்கு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.