ஜூலை மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் முதன் முதலாக அத்துமீறி நுழைந்த நபர் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் 38 வயதுடைய பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது கத்தியை கொண்டு பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார்.
அதன் பின்னர் போராட்டகாரர்கள் செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.