follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் மூலோபாய திட்டத்தை உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகரித்துள்ளது

இலங்கையின் மூலோபாய திட்டத்தை உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகரித்துள்ளது

Published on

இலங்கையின் மூலோபாயத் திட்டத்திற்கு, உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இம்மூலோபாய திட்டம் 2023 முதல் 2027 டிசம்பர் வரைக்குட்பட்ட காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டதுடன் அதற்கான பெறுமதி 74.87 மில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இலங்கையின் மூலோபாயத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது, இலங்கையின் தேசியக் கொள்கைக் கட்டமைப்பு மற்றும் 2023-2027 க்கான ஐக்கிய நாடுகளின் நிலைபேண்தகு அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படும்.

மேலும் இத்திட்டமானது, நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு(SGD)2 இற்கிணங்க, 2030 ஆம் ஆண்டளவில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கு எனும் இலக்கை அடைவதற்கேற்ப நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இம்மூலோபாயத் திட்டம் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளான 1, 5, 10 மற்றும் 13 ஆகியவற்றின் முன்னேற்றத்துக்கும் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்கு 17 இற்கமைய தேசிய மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி பதில் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் உதவும்.

இதேவேளை, உணவுப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட போஷாக்கை அடைவதற்கும் 2030 ஆம் ஆண்டளவில் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அதன் நிகழ்ச்சி நிரலுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், இலங்கை அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளை உலக உணவுத் திட்டம் வரவேற்றுள்ளது.

உணவுப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய மோசமான நிலையை குறுகிய காலத்தில் குறைப்பதற்காகவும் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு நிலைமையை முன்னேற்றுவதற்காகவும் இலங்கை முன்னெடுத்துவரும் தேசிய மட்டத்திலான முயற்சிக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாவது கூட்டத்தொடரின்போதே இலங்கையின் மூலோபாய திட்டத்திற்கு உலக உணவு திட்டம் அங்கீகாரம் அளித்ததாக ரோமிலுள்ள அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் எம். பீஸ்லி தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உணவு பாதுகாப்பு மற்றம் போஷாக்கிற்காக அரசாங்கம் செய்துள்ள முதலீட்டின் மூலம் கிடைக்கும் பலனை பன்மடங்கு அதிகரிப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவி மற்றும் கொள்கைரீதியான ஆலோசனைகளை வழங்க உலக உணவு திட்டம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்திற்கு தன்னார்வ நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்படுகிறது. எனவே, இலங்கையின் மூலோபாய திட்டங்களுக்காக உலக உணவு திட்டத்தினால் வழங்கப்படும் பங்களிப்பானது நன்கொடையாளர்களால் உலக உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி மூலமாகும் என்பது குறிப்பிடதக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...