காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் வெளியிடப்பட்டுள்ள கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொத்துஹெரவில் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த கஞ்சா கலந்த சொக்லேட்டில் அஸ்வகந்தா, வெல்மீ மற்றும் லுன்வில உள்ளிட்டவை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகை சொக்லேட்டை சந்தைக்கு வெளியிடுவதற்கு அனுமதி கோரி உற்பத்தியாளர் ஆயுர்வேத திணைக்களத்திடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
“இது விஷம், ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட தயாரிப்பு ஆகும், மேலும் நாட்டில் கஞ்சாவைப் பயன்படுத்துவது மருந்துகளைத் தயாரிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்த தயாரிப்புக்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, மட்டுப்படுத்தப்பட்ட பகுதியை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சொக்லேட் தயாரித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.தனஞ்சய வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆய்வக மற்றும் மருத்துவ ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதாகவும், மூன்றாம் கட்ட பொதுமக்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன்போது சுமார் 1,000 சாக்லேட்டுகளின் மொத்த கையிருப்பும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.