சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரினை திறந்து விடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) அதிகாலை 03 மணி முதல், முதல் சுற்றில் மூன்று நாட்களுக்கு தண்ணீர் விடப்படும் என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.
நாளொன்றுக்கு 3.5 மில்லியன் கனமீற்றர் நீர் திறந்துவிடப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
மகாவலி வளவ பிரதேசத்தில் 20 வருடங்களின் பின்னர் மிக மோசமான வரட்சியான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில், உடவலவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றிப்போவதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை உக்கிரமடைந்துள்ளது.
217,800 ஏக்கர் அடி மொத்த நீர் கொள்ளளவைக் கொண்ட உடவலவ நீர்த்தேக்கத்தின் வினைத்திறன் நீர் கொள்ளளவு நேற்று (07) காலை 956 ஏக்கர் அடியாக குறைந்துள்ளது.
இது ஒரு சதவீதமாக நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவில் 0.45% மதிப்பாகும்.
வழமையான நிலையில் உடவலவ நீர்த்தேக்கத்தில் இருந்து விவசாய தேவைகளுக்காக வினாடிக்கு 3,200 ஏக்கர் அடி நீர் கொள்ளளவானது நேற்றுமுன்தினம் திறந்துவிடப்பட்டிருந்த போதிலும் நேற்றுமுன்தினம் 934 ஏக்கர் அடி கொள்ளளவு நீர் திறந்துவிடப்பட்டது.
அதன்படி, வலது கால்வாயில் இருந்து 521 ஏக்கர் அடி தண்ணீரும், இடது கால்வாயில் இருந்து 413 ஏக்கர் அடி தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு சென்றது.
சமனல குளம் மற்றும் வெலி ஓயா ஆகியவற்றில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நேற்று முன்தினம் 545 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு சேர்க்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடவலவ நீர்த்தேக்கத்தின் வினைத்திறன்மிக்க நீர் மட்டம் அண்மைக்கால வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உடவலவ நீர்த்தேக்கத்தில் இருந்து விளைநிலங்களுக்கு போதிய அளவு தண்ணீர் பாயாமல் போனதால் சுமார் 800 ஹெக்டேயர் நெற்பயிர்களும் 100 ஹெக்டேயர் மேலதிக பயிர்களும் நாசமாகியுள்ளதாக மகாவலி அதிகார சபையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில், சமனல குளம் நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் கொள்ளளவை விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்று வழிகளைக் கண்டறிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.