இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்துவதை அதன் உயரிய குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. மேலும், இஸ்லாம் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலக சமாதானத்தையும் மனித இன ஐக்கியத்தையும் வலியுறுத்துகின்றது.
எமது தாய்நாடான இலங்கை பல இனத்தவர்களும் பல சமூகங்களும் வாழும் நாடாகும். இங்கு வாழும் பிற சமயத்தவர்களுடன் அன்போடு பழகி அவர்கள் மத்தியில் உள்ள ஏழைகள், விதவைகள், நோயாளிகள், அங்கவீனர்கள் போன்றோருக்கு உதவி செய்வதையும் அவர்களது மத வழிபாடு தொடர்பான அனுஷ்டானங்களுடன் சம்பந்தப்படாத விடயங்களில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதையும் இஸ்லாம் வரவேற்கின்றது. இதுவே இஸ்லாம் கூறும் சகவாழ்வாகும்.
எனினும், சகவாழ்வு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் பிற சமயத்தவர்களின் வணக்க வழிபாடுகளுடன் தொடர்புபடும் மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இஸ்லாமிய வழிமுறையல்ல. இன்னும் ஏனைய மதங்களின் நடைமுறையிலும் இவை காணப்படுவதில்லை.
ஆகவே, முஸ்லிம்கள் தமது இறை நம்பிக்கை (ஈமான்) க்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதை தவிர்ந்து நடந்துகொள்ளுமாறும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது ஆலிம்களின் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்று குழு மற்றும் ஃபத்வாக் குழு அனைத்து முஸ்லிம்களையும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.
குறிப்பு: சகவாழ்வு தொடர்பான ஐம்இய்யாவின் வழிகாட்டலை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
https://new.acju.lk/wp-content/uploads/2025/01/Declaration-of-Unity.pdf