நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பழங்குடியின பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து, இளம் மவோரி பாராளுமன்ற உறுப்பினர் ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் (வயது 22), பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பி தனது எதிர்ப்பைக் வெளியிட்டார்.
இதன்போது, அவருடன் மற்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பிய இந்தச் சம்பவம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட விடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி, பலரும் ஹனாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அரசு அமைத்த ஆணையம் பாராளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் எழுப்பிய மூன்று உறுப்பினர்களையும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது.
அதில், தெ பாத்தி மவோரி எனும் மவோரி பழங்குடியின கட்சியின் துணைத் தலைவர்களான டெப்பி ஞாரெவா பாக்கெர் மற்றும் ராவிரி வைட்டிட்டி ஆகியோரை 21 நாள்களுக்கும் இளம் உறுப்பினர் ஹனாவை 7 நாள்களுக்கும் இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா, சபை உறுப்பினரை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அவர் தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியதால் குறைந்தபட்ச தண்டனை மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது