இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் மற்றும் பணியாட் தொகுதியினருக்கான வழக்கு நடவடிக்கைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதால் இதற்குத் தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், பாராளுமன்றத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சைகை மொழியிலான உரைபெயர்ப்பை மேலும் விஸ்தரிப்பதற்கும் பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய இயலாமையுடைய பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலதன முதலீட்டு நிதியத்தின் (Commonwealth Parliamentarians with Disabilities (CPwD) Capital Investment Fund) அனுசரணையுடன் பாராளுமன்றக் குழு அறைகள் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சைகைமொழியிலான உரைபெயர்ப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.