இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் இஹாப் கலீல், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்றைய தினம் அமைச்சில் சந்தித்து காசாவின் நிலைமை மற்றும் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்தார்.
பாலஸ்தீனப் பிரச்சினையில் இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கும் பாலஸ்தீனத் தூதுவர் தனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகளுக்கான முகவர் நிறுவனம் (UNRWA) மூலம் காசா சிறுவர் நிதியத்திற்கு இலங்கை வழங்கிய 1 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடைக்கு தூதுவர், நன்றிகளைத் தெரிவித்தார்.
காசாவில் நிலவும் தற்போதைய மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கையின் ஆழ்ந்த கவலையை அமைச்சர் ஹேரத் வெளிப்படுத்தினார்.
ஐக்கிய நாடுகளின் சாசன விதிகள் மற்றும் தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் ஏற்பாடுகளுக்கிணங்க பாலஸ்தீன மக்களின் அரசுக்கான உரிமை குறித்த இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நீண்டகால பாதுகாப்பு, அமைதி மற்றும் செழுமையை அடைவதற்கு ஏதுவாக, 1967 எல்லைகளின் அடிப்படையில், அயலில் வாழும் இரண்டு நாடுகளினதும், சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு ஏற்ப பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இலங்கை உறுதிபூண்டுள்ளது.