சுற்றுலா ஹோட்டல்களைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளின் தூய்மையைப் பேணும் நோக்கில் ஹோட்டல் கடற்கரைப் பராமரிப்பாளர்களை நியமிக்கும் வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டம் ஹபராதுவ பிரதேச செயலக வளாகத்தில் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கும், குறித்த சுற்றுலா விடுதிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன்படி, சுற்றுலா ஹோட்டல்களைச் சார்ந்துள்ள கடற்கரைப் பகுதியைப் பாதுகாக்க பிரதேச நபர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அந்த நபருக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.
‘அழகான கடற்கரை – கவர்ச்சிகரமான பயண எல்லை’ என்ற பெயரில் “Clean Sri Lanka” வேலைத்திட்டம், அரச, தனியார் மற்றும் பொதுமக்கள் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள கடற்கரைகளின் தூய்மையைப் பேணுவது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருப்பதுடன், கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ப்லூ பிளாக் சான்றிதழை ( Blue flag certification) இலங்கை பெறுவதற்கும் இத்திட்டம் பங்களிக்கும்.