டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது. இருவருமே, தமது சொந்த சமூக ஊடக தளங்களை ஊடாக பரஸ்பரம் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
பல டிரில்லியன் டாலர் வரி விலக்குகள் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் டிரம்பின் பட்ஜெட் மசோதாவால் ‘ஏமாற்றம்’ அடைந்ததாக ஈலோன் மஸ்க் அண்மையில் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மே மாத இறுதியில், அதிபர் டொனால்ட் டிரம்பின் செலவுக் குறைப்பு பணிக்குழுவை (டோஜ்- DOGE) வழிநடத்தும் தனது பதவிக்காலம் ‘முடிவுக்கு வருகிறது’ என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார்.
மஸ்க்கின் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதியுதவி இல்லையென்றால் கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றிருப்பார்’ என்ற கருத்துக்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான குடியரசுக் கட்சியின் அழுத்தத்தால் மஸ்க்கின் கார் நிறுவனமான டெஸ்லா பாதிக்கப்படும் என்பதே மஸ்க் தனக்கு எதிராக திரும்ப காரணம் என டிரம்ப் கூறினார்.
இதற்கு உடனடியாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்தார் மஸ்க். கார் மானியங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும், தேசியக் கடனைக் குறைக்க விரும்புவதாகவும், அது நாட்டின் இருப்பு சார்ந்த அச்சுறுத்தல் என்றும் அவர் கூறினார்.
தனது உதவி இல்லாமல் கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் அவரது கட்சியினர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“டிரம்பிற்கு நன்றியுணர்வு இல்லை” என்று அவர் விமர்சித்தார்.
பின்னர், நேற்று பிற்பகலில், ஈலோன் மஸ்க் தனது தொடர்ச்சியான எக்ஸ் தள பதிவுகள் மூலம் டிரம்புக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களைத் தொடங்கினார். அதன் பிறகு தான் இந்த மோதல் தீவிரமடையத் தொடங்கியது.
இந்த மோதல் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது.
“டிரம்பின் அதிபர் பதவி என்பது இன்னும் மூன்றரை ஆண்டுகள் தான், ஆனால் எனக்கு இன்னும் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது” என்று எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.