கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கல்வி, உயர் கல்வி கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனெவிரத்ன மற்றும் தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் இந்தக் குழுபாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதற்கமைய, கல்வி மறுசீரமைப்பு உபகுழுவில் (கலாநிதி) ஹரினி அமரசூரிய (தலைவர்), அனுர கருணாதிலக்க, ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஞானமுத்து ஸ்ரீநேசன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், பாடசாலைகளில் காணப்படும் மனித வளம் மற்றும் பௌதீக வள பற்றாக்குறை பற்றிய உப குழுவில் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன (தலைவர்), மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், சந்தன தென்னகோன், சுகத் வசந்த த சில்வா மற்றும் தர்மப்ரிய விஜேசிங்ஹ ஆகியோரும் அடங்குகின்றனர்.
அத்துடன், இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல் பற்றிய உப குழுவில் சமன்மலீ குணசிங்ஹ (தலைவர்), அபூபக்கர் ஆதம்பாவா, சஞ்ஜீவ ரணசிங்ஹ மற்றும் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ ஆகியோரும், கல்விச் சபையை நிறுவுதல் பற்றிய உப குழுவில், மஹிந்த ஜயசிங்க, (தலைவர்), (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், மஞ்ஜுள சுரவீர ஆரச்சி மற்றும் ருவன் மாபலகம ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், உயர் கல்வித் பிரிவுகள் பற்றிய உப குழுவில் (வைத்தியர்) மதுர செனெவிரத்ன (தலைவர்), (கலாநிதி) உபாலி பன்னிலகே, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நிமல் பலிஹேன மற்றும் மஞ்சுல சுகத் ரத்னாயக ஆகியோரும், திறன் கல்விப் பிரிவு பற்றிய உப குழுவில் நலின் ஹேவகே (தலைவர்), டி.வீ. சானக, சிவஞானம் சிறீதரன் மற்றும் இம்ரான் மகரூப் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
பல்கலைக்கழக பிரவேசம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இயலாமையுடைய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதற்கும் அவர்களுக்கான வசதிகளை விருத்தி செய்தல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் காணப்படும் சிக்கல்கள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் எடுக்கக்கூடிய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியதுடன் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்களுக்காக அரசாங்கம் அவசரமாக தலையிடுவதாகத் தெரிவித்தார்.