அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டி லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இன்று (11) ஆரம்பமாகவுள்ளது.
கடந்த முறை இந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்ற பட் கமின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி நடப்புச் சம்பியன் பட்டத்தை தக்கவைக்க இந்தப் போட்டியில் மோதவுள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்க அணி இரண்டு தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக ஐ.சி.சி. கிண்ணம் ஒன்றை கைப்பற்றும் எதிர்பார்ப்புடனேயே இன்று களமிறங்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெற்ற உலக டெஸ்ட் சம்பியன்சிப் பருவத்தில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் அவுஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தே இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இம்முறை உலக டெஸ்ட் சம்பியன்சிப் பட்டத்தை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையும் அதிகரிக்கப்பட்டு சம்பியனாகும் அணி 3.6 மில்லியன் டொலர்களை வெல்வதோடு இரண்டாம் இடம் பிடிக்கும் அணி 2.16 மில்லியன் டொலர்களை கைப்பற்றும்.