சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெட்ஸ்டார் ஏஷியா (Jetstar Airways )விமானச் சேவை நிறுவனம் தனது சேவையை ஜூலை 31ஆம் திகதியுடன் அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்த உள்ளது,
அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் அதன் தலைமை நிறுவனமான குவாண்டாஸ் எடுத்துள்ள முக்கிய உருமாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜெட்ஸ்டார் ஏஷியா விமானச் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 500க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. எனினும், அவர்களுக்குப் பல வகைகளில் ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிழப்போருக்கு பணிநீக்கப் பலன்கள், குவாண்டாஸ் நிறுவனத்திலோ அல்லது மற்ற நிறுவனங்களிலோ மறுவேலைவாய்ப்பு போன்றவை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அண்மைய ஆண்டுகளில் உயர்ந்து வரும் விநியோகிப்பாளர் செலவினம், விமான நிலையக் கட்டணங்கள், விமானச் சேவை கட்டணம் போன்றவற்றால் ஜெட்ஸ்டார் நிறுவனம் தனது விமானச் சேவையை நிறுத்திக்கொள்ளும் முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.