விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஜூன் 30ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் 11வது பிரிவுக்கு அமைய அரசாங்கத்தினால் நிதி செயல்நுணுக்கக் கூற்று ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தேவையைப் பூர்த்திசெய்யும் நோக்கிலேயே இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதற்கு அமைய பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16ற்கு அமைய பிரதமரினால் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரினால் பாராளுமன்றம் ஜூன் 30 ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு கூட்டப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 4.30 மணிவரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கூட்டுவது பற்றிய தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.