சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா மற்றும் தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சு, இலங்கை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்தது.
இந்த ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் “Yoga for One Earth, One Health” என்பதாகும். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையை வலியுறுத்துகிறது.
விழாவின் ஒரு பகுதியாக, யோகா அறிவை எளிதில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், யோகா பென்ட்ரைவ் மற்றும் ஹத யோக பிரதீபிகா நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான விழாவில், அறிவியல், தொழில்நுட்ப, தொழிலாளர், பாதுகாப்பு, மத விவகாரங்கள், விளையாட்டு துறைகள் தொடர்பான அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிசபாநாயகர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.