கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி, விசாரணைக்கு உட்படுத்தப்படும் அரசியல்வாதிகளில் பல முக்கிய முன்னாள் அமைச்சர்களும் அடங்குவர்.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சிங்கள பத்திரையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரிடமும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அறிக்கை கூறுகிறது.
சட்டவிரோதமாகச் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் சிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.