“ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை நான் படுகொலையிலிருந்து காப்பாற்றினேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் செயல்படுகிறார்” என டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மரணத்திலிருந்து அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுத்தது. ஈரான் விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்தை ஈரான் தாக்கியது. இதைதொடர்ந்து பின்வாங்கிய டிரம்ப், ஈரான்- இஸ்ரேல் இடையே 12 நாள் போர் முடிவடைந்ததாக அறிவித்தார். இதை இரு நாடுகளும் தாமதமாக ஏற்றன. மோதல் குறித்து பேசிய காமேனி, ஈரான் இந்த போரில் வெற்றி பெற்றதாகவும், அமெரிக்காவின் கன்னத்தில் ஈரான் அறைந்துவிட்டதாகவும் பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
“ஈரான், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்க முயற்சித்தால், அதை தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய இடங்களை குறிவைத்து குண்டுகள் வீச தயங்கமாட்டேன். அந்த நாட்டின் உயர்மட்டத் தலைவர் எங்கே தங்கியுள்ளார் என்பதையும் எனக்கு தெளிவாகத் தெரியும். ஆனால் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அவரை கொல்ல அனுமதிக்க மாட்டேன்.” என எச்சரிக்கையோடு தெரிவித்தார்.