முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்ததாக கூறப்படும் கோரிக்கையை மையமாகக் கொண்டு பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது என மல்வத்து மகா விகாரையால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஷிரந்தியை கைது செய்ய வேண்டாம் என்று அநுரவிடம் சொல்லுங்கள்… மஹிந்த மல்வத்து மகாநாயக்கரிடம் கோரிக்கை” என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மல்வத்து மகா விகாரையின் பிரதிப் பதிவாளர் மஹாவெல ரத்தனபால தேரர், மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும், இந்த சம்பவம் தொடர்பான எந்த சந்திப்பும், தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை எனவும், இவ்வாறான பொய் தகவல்களை உருவாக்கி பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுத்தும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.