நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் காணப்படும் பல நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முனைவோரின் சொத்துக்கள் மீண்டும் ஏலம் விடப்படவுள்ளது. எனவே அவர்களுக்கு சாதகமான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று(30) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தத்துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களிக்கிறது. சுமார் 4 மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இவ்வாறு பராட்டே சட்டம் அமுலுக்கு வந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்தரப்பினரின் பங்களிப்பு குறையும் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். இது பொருளாதார வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கும்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்களை ஏலம் விடுவது அவர்களின் வணிக முயற்சிகளை சரிவுக்கு இட்டுச் செல்கிறன்றன.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கிறது. வேலையின்மையை அதிகரிக்கச் செய்கின்றன. ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக ஏற்றுமதியைக் குறைக்கிறது.
முந்தைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஏமாற்றியே வந்துள்ளன.
தேர்தலை நோக்கமாகக் கொண்டு பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தனர். தற்போது இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தை போலவே எந்த சாதகமான தீர்வுகளையுமோ அல்லது மாற்றுத் தீர்வுகளையோ பெற்றுக் கொடுக்கவில்லை.
நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் பராட்டே சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, கடன் மற்றும் வட்டிச் சலுகைகளை எதிர்பார்த்தனர்.
அத்தோடு கடன் மறுசீரமைப்பையும் எதிர்பார்த்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 மற்றும் வங்குருத்து நிலை காரணமாகவே இத்தரப்பினர் இந்நிலைக்கு தள்ளப்பட்டனர். எனவே, அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அவர்களின் கடன்களை மறுசீரமைத்தல், கடன்களைத் தள்ளுபடி செய்தல் மற்றும் வட்டியில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்தல் மூலம் அவர்களுக்கு மீள்வதற்கான வழிவகைகளைச் செய்து கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்தப் பிரச்சினையிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற அதிகாரமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும் கொண்ட அரசாங்கம் இருப்பதால், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் இந்தப் பிரச்சினைகளுக்குப் பதில்களையும் தீர்வுகளையும் எதிர்பார்க்கின்றனர். இந்தப் பிரச்சினைகளில் இருந்து அரசாங்கம் நழுவ முடியாது.
எனவே, பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
பராட்டே சட்டத்தை அமுல்படுத்துவதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்தி, கடன்களை மறுசீரமைக்க, தவனை கடன்கள் மற்றும் வட்டியைக் குறைக்க இதன் மூலம் அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் உங்களை வலியுறுத்துகிறோம். பொய்யான பேச்சுவார்த்தைகளை நடத்தி ஏமாற்றும் சகாப்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.