குஜராத் மாநிலம் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் காம்பிரா – முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது. 2 தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் முழு பகுதியும் இடிந்து விழுந்தது.
பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு வந்த பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். ஆற்றில் பலர் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
வாகனங்கள் ஆற்றில் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த பாலம் 40 ஆண்டுகள் பழமையானது. இதனால் பாலத்தின் உறுதி தன்மை பலவீனமாக இருந்ததாக கூறப்படுகிறது.