ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாள்பட்ட சிரை பற்றாக்குறை (Chronic venous insufficiency) என்பது நரம்புகளில் இரத்தம் தேங்கி, நரம்பு சுவர்களில் அழுத்தம் மற்றும் திரிபு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் ஒரு நிலை ஆகும்.
இந்நிலைமை உலகளவில் 20இல் ஒருவரை பாதிக்கும் எனவும், கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுகிறது எனவும் பெரும்பாலும் நரம்புகளில் சேதமடைந்த வால்வுகளின் விளைவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இது சாதாரண ஒரு நோய் நிலைமை தான் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜனாதிபதி ட்ரம்ப் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் எந்த அசௌகரியத்தையும் அனுபவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.