ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்ய தூதுவர் வெளியேறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு உலகளாவிய உணவு நெருக்கடிக்கு காரணம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து அவர் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிராக உணவுப் பொருட்களை மறைமுக ஏவுகணையாக ரஷ்யா பயன்படுத்துகிறது என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரஷ்ய தூதுவர் வசிலி நெபென்சியா ஐரோப்பிய ஒன்றிய தலைவர் போலியான விடயங்களை பரப்புவதாக தெரிவித்தார்.
போரினால் உக்ரைன் துறைமுகங்களில் உணவுகள் தேங்கியுள்ளன.உக்ரைன் சமையல் எண்ணெய், சோளம் மற்றும் கோதுமை மா என்பவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது.
ரஷ்யா அதிகளவு தானியங்களை மற்றும் உரம் என்பவற்றை ஏற்றுமதி செய்கிறது.
இந்த ஏற்றுமதிகள் இல்லாததால் மாற்றுப் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நியூயோர்க்கில் நடத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கருத்துரைத்த, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ரஷ்ய போரின் விளைவுகள் உலகம் முழுவதும் பரவுவதாக குறிப்பிட்டார்.
இது உணவு விலைகளை அதிகரிக்கிறது.மக்களை வறுமைக்கு தள்ளியுள்ளது.
இந்த உணவு நெருக்கடிக்கு ரஷ்யா மாத்திரமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கல் குற்றஞ்சாட்டியுள்ளார்.