ஊடகங்கள் கூறுவது போல் தேர்தலை நடத்துவதற்கு நிதியமைச்சு தம்மிடம் பணம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
தேவையற்ற வேலைகளுக்கு செலவு செய்வதற்கு போதிய பணம் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பில் நாம் வினவியதற்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், இது நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
தேர்தலை தடுக்கும் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பான இறுதி தீர்மானம் நீதிமன்றத்தினால் எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் பெப்ரவரி 10 ஆம் திகதி நிதி நிலைமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னர் நீதிமன்றம் எடுக்கும் தீர்ப்பின்படி அனைத்து தரப்பினரும் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.