‘செவேரிட்டி’ என்ற நிறுவனத்திடம் இருந்து 36 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அந்த மருந்துகள் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை என அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் உடல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80 வீதமானவை இலங்கையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் அல்ல எனவும் அவற்றுக்கான மதிப்பீட்டோ பரிந்துரைகளோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு எந்தவொரு டெண்டர் கோரப்படாமலும் சப்ளையர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளின் தரம் மற்றும் விலைகள் குறித்து கலந்துரையாடப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 270 மருந்துகள் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அத்தியாவசியமற்ற மருந்துகள் இருப்பதாகவும், பதிவு செய்யாமல் அவசர காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்ய அதிகார சபைக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.
அத்தியாவசிய மருந்துகளை மட்டும் இறக்குமதி செய்ய கிடைக்கும் பணத்தில் தேவையற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் கடன் உதவியின் கீழ் பெறப்படும் பணம் முற்றாக அழிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.