தற்போதைய பொருளாதார நிலை மற்றும் IMF உடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட உரையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்தியுள்ளார்.
சீனாவின் கடன்மறுசீரமைக்கான எழுத்துமூல உத்தரவாதம் நேற்றிரவு தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடி அதனை சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்
அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள அமுல்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்-
சீன எக்சிம் வங்கியிடமிருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே IMF ற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்
கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் இடமளிக்கப்படும்.
அதனை விடுத்து, ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் மூலம் இந்த நடவடிக்கையை குழப்ப நினைப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உரையின் போது எச்சரித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்ற உரையின் போது எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி , நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.