ஜப்பானில் கிசுகிசு யூடியூபராக இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்வானவர் ஒருமுறை கூட பாராளுமன்றத்திற்குச் செல்லாததால் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்.
யோஷிகாஜூ ஹிகாஷித்தானி எனும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் அவை வெளியேற்றியுள்ளது.
ஏழு மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்திற்கு தேர்வான அவர், ஒரு நாள் கூட அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவே இல்லை. அவைக்கு தொடர்ந்து வராமல் இருந்த அவரது பாராளுமன்ற உறுப்பினரை பறித்து நாடாளுமன்ற ஒழுங்குமுறை கமிட்டி உத்தரவிட்டுள்ளது.
யோஷிகாஜூ ஹிகாஷித்தானியை கடந்த ஜூலை மாதம் மேலவைக்கு வாக்காளர்கள் தேர்வு செய்தனர். யூடியூபில் காஸி என்ற பெயரில் அறியப்பட்ட அவர், பிரபலங்கள் குறித்த கிசுகிசுக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தைப் பொருத்தவரை, வெளியேற்றுதல் என்ற முடிவு மிகக் கடுமையான தண்டனையாக பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற ஒழுங்குமுறை கமிட்டியின் முடிவை இவ்வார இறுதியில் ஜப்பான் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ளது.
மோசடி குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்படலாம் அல்லது பிரபலங்களால் அவதூறு வழக்குகள் தொடரப்படலாம் என்ற அச்சத்தின் பேரில் அவர் நாடாளுமன்றத்திற்குச் செல்ல மறுத்து விட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.