பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்களுடன் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இலங்கைக்கு இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் ஒன்று கடன் மறுசீரமைப்பு. மற்றொன்று, பசுமை வலுசக்தியை நோக்கி நாட்டை வழிநடத்துவது. கடன் மறுசீரமைப்புப் பணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டில் பசுமைப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் அவசரமாகச் செயற்பட வேண்டும். பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்கான அனைத்துத் தகுதிகளும் இலங்கைக்கு உள்ளது. ஏனெனில் சூரிய சக்தி, காற்றாலை, உயிர் வாயு, கடல் அலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி வலுசக்தியை உற்பத்தி செய்யும் திறன் இலங்கைக்கு இருக்கிறது. எனவே, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான முக்கிய ஆற்றலாக பசுமைப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தலாம்.
அதற்காக இந்த மாநாட்டுக்கு வந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஊடாக முதலீட்டாளர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதோடு அவர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கமும் கடமைப்பட்டுள்ளது. இது குறுகிய கால திட்டம் அல்ல. இது ஒரு நீண்ட கால திட்டம். எனவே, இதற்கான சட்டக் கட்டமைப்பைத் தயாரிப்பது அவசியம். அதற்காக விரைவில் சட்டம் இயற்ற எதிர்பார்க்கப்படுகிறது.