மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள், நோக்கம், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவற்றில் காணப்படும் பிரச்சினைகள் என்பன இதன்போது இனங்காணப்பட்டன.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சின் செயலாளர் சோமாரத்ன விதானபத்திரன உள்ளிட்ட அதிகாரிகள் இங்கு கருத்துத் தெரிவித்தனர். இம்முறை தேசிய வெசாக் தினத்தை அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்த நிகழ்ச்சித் திட்டமாக புத்தளம் மாவட்டத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பௌத்த விவகாரத் திணைக்களம், முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசாரத் திணைக்களம், இந்து சமய மற்றும் கலாசாரத் திணைக்களம், கிறிஸ்தவ சமய திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவற்றில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
சகல சமயங்கள் தொடர்பிலும் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது, தற்பொழுது காணப்படும் காலாசார சீர்கேடுகளைத் தடுத்தல் போன்றவற்றுக்கான சட்டங்களை இயற்றுவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவதற்கும், அவற்றுக்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் துறைசார் மேற்பார்வைக் குழு ஆதரவு அளிக்கும் என்றும், தேவையேற்பட்டால் அமைச்சரையும் அந்தக் குழுவில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் குழுவின் தலைவர் மகேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதற்கமைய குழு கவனம் செலுத்த எதிர்பார்க்கும் விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் செயற்படுவதற்கான அடிப்படை வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.