இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்தை எதிர்வரும் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இன்று (20) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (20) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைப் பொருளாதார மீட்புக்கான விரைவான நிலைமாற்றத்தினை அடைவதற்காகவும் அதனைத் தொடர்ந்து இலங்கை மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினர்களுக்கும் நலன் பயக்கும் நிலைபெறுதகு பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 3.0 பில்லியன் ஐ.அ. டொலர்கள் பெறுமதியான 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான ஏற்பாடு 2023 மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற சகல அங்கீகாரமும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டுமென இந்தத் தீர்மானத்தினால் முன்வைக்கப்படுவதுடன், மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து தேவையேற்படின் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.
பாராளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், இந்த ஒவ்வொரு நாளும் மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.