பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரம் கூட நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் மீறும் நிலையை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அமைதிவழி ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டாளர் வசந்த முதலிகே அவர்களை பார்வையிடுவதற்காக இன்று(19) ராகம வைத்தியசாலைக்கு சென்ற போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டு மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்த சுதந்திரம் இருக்க வேண்டும் எனவும், அரசாங்கம் இதனை இல்லாதொழிப்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் வன்மையாக நிராகரிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தலை இடைநிறுத்தி சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு மக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட இந்த அரசாங்கம் மீறிவருவதாகவும், இவ்வாறான போக்குடைய அரசாங்கத்துடன் தனக்கோ அல்லது மக்களுடன் தொடர்புள்ள தமது கட்சியில் உள்ள எவருக்குமோ எந்த தொடர்புமில்லை எனவும், இந்த மக்கள் விரோத அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைந்து கொள்ளப் போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.