75 ஆண்டுகளாக பாலஸ்தீனியர்களின் அரசியல், சமூக மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட சுதந்திர உரிமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர் எனவும், அவை அனைத்தையும் வெற்றிகொள்ளும் போராட்டத்திற்கு தான் தொடர்ந்தும் குரல் கொடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பலஸ்தீனத்தில் நடப்பது மிகப்பெரிய மனித அவலம் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது, சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாமும் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பாலஸ்தீனம் சட்ட ரீதியானதோர் தேசம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகம் மற்றும் இலங்கை அரபுலக இராஜதந்திரிகள் கவுன்ஸில் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த NAKBA பேரிடர் தினத்தின் 75 ஆவது ஞாபகார்த்த நிகழ்வு நேற்றைய தினம்(22) சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்ப்போர் கூடத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச நக்பா தின ஞாபகார்த்த சிறப்புரையினை நிகழ்த்தினார்.