கடந்த வருடங்களை விட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவு

297

நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான வரைவுகள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 ஆம் ஆண்டில் நாட்டின் அபிவிருத்திக்கான நோக்கு என்ற திட்டத்திற்கு இணையாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் நாட்டின் அதிவேக வீதிகள் நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தேசிய பௌதீக திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் இரு வருடங்களுக்கான முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்பட உள்ளதோடு, வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருந்து தெரிவித்த அமைச்சர்.

கடந்த காலங்களில் கொவிட் பரவலால் நாடு நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டமையால் நிர்மாணத்துறை பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களும், நிர்மாணப் பணிகளும் தடைப்பட்டன. அதேபோல் பொருட்கள் இறக்குமதி தடைப்பட்டமையினாலும் நிர்மாணத்துறை ஸ்தம்பித்து போனது. ஒப்பந்தக்கார்ர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணத்தையும் வழங்க முடியாமல் போனது.

தற்போது நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ளமையினால் குறுகிய கால மற்றும் இடைக்கால திட்டமிடல்களை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்க எடுத்துள்ளார். அதன் கீழ் எட்டு விசேட திட்டங்களை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கோரிக்கைக்கு இணங்க 2000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பிலான ஒப்பந்தம் சீனாவுடன் கைசாத்திடப்படவுள்ளது.

அந்த வீடுகளை குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவில் கைவிடப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்க 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த திட்டங்களை படிப்படியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரமும் நாடும் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளமையினால் முதலீட்டாளர்களின் வருகையும் அதிகரிக்கிறது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதனால் நாட்டின் நிர்மாணத்துறை மீளவும் வழமையான நிலைக்குத் திருப்ப முடியும் என நம்பிக்கை உள்ளது.

நிர்மாணத்துறைக்கு மாற்றி வழிகள் எவையும் இல்லை. நிர்மாணத்துறையின் வீழ்ச்சியின் காரணமாக பெருமளவானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். நாட்டில் இருந்த நிர்மாணத் துறைசார் அனுபவங்களை கொண்ட பலரும் நாட்டிலிருந்து சென்றுள்ளமை பெரும் பாதிப்பாகும். எம்மிடத்திலுள்ள தரவுகளுக்கமைய ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நிர்மாணத்துறை ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் அவர்களை உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் கடந்த காலங்களில் சீமெந்து விலையேற்றமானது எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றியே நிகழ்ந்த்து. தற்போது ஓரளவு விலை குறைவடைந்துள்ளது. அதேபோல் கட்டுமான பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் கீழ் இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து சீமெந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து விசேட திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டம் சாத்தியமாகும் பட்சத்தில் நாட்டின் சீமெந்து விலையானது 400 – 500 ரூபாவினால் குறைவடையும் சாத்தியம் உள்ளது.

நாட்டில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்களின் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரசித்தம் அற்ற தீர்மானங்கள் பலவற்றை முன்னெடுத்திருந்தார். அதன் பலனாகவே நாடு தற்போது சுமூகமான நிலைமைக்கு மாறியுள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக காணப்பட்டதை விடவும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here